former justice karnanan chennai high court order police

Advertisment

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டுவரும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கர்ணன் வெளியிட்ட வீடியோக்களை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ‘புகார்கள் தொடர்பாக கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 26- ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றத் தயாராகஇருக்கிறோம்’எனத் தெரிவித்தார்.

பார் கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும், தொடர்ந்து வீடியோக்களை கர்ணன் வெளியிட்டு வருவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்ணன் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.