தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா முகாம்கள் மூலம் மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 4:23 மணி நிலவரப்படி 20.11 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை மிஞ்சி தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 4 மணி அளவிலேயே 20 லட்சம் இலக்கு எட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய மருத்துவ முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ''இதற்கு தமிழ்நாடு மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். தினமும் தடுப்பூசி செலுத்தவேண்டும் இதேபோல் மெகா முகாம்களும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒரு காலத்தில் தடுப்பூசி வேண்டாம் என வெறுக்கும் நிலையிலிருந்த தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய பொதுமக்களுக்கும் முதல்வருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்'' என்றார்.
இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை எட்ட உள்ளது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் முகாம்களில் எதிர்பார்த்ததை விட அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை தமிழகம் முழுவதும் 24 லட்சம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 8.30 மணிவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மெகா முகாம் நீட்டிக்கப்படுகிறது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.