இதில் அருண்ராஜ் கடந்த 2018-மார்ச் 4-ந்தேதி காலை, சென்னை மெரீனாவில் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர். திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை, மன உளைச்சல், குடும்பத் தகராறு என அவரது இறப்புக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 3- வது நாளில், அதாவது மார்ச் 07- ந்தேதி அயனாவரம் காவல் நிலைய எஸ்.ஐ சதீஷ்குமார் தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் மேலே சொல்லப்பட்ட காரணங்கள் தான் காரணம் என்று சொன்னாலும், கடைசிவரை பெற்றொருக்கு இன்னமும் மகனின் இறப்புக்கான காரணம் விளங்கவில்லை. இந்த வரிசையில் இப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரனும் சேர்ந்துள்ளார்.!! இப்படி வெவ்வேறு காலங்களில் சீரான இடைவெளியில் போலீஸாரின் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அடுத்த சில மணிநேரங்களில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மற்றொரு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றிய சரவணன், "நான் இறுதிப் பயணத்தை நோக்கி செல்கிறோன். இது முட்டாள் தனமானது தான்" என்று வாட்ஸ்ஆப் குரூப்பில் பதிவிட்டு சிறிதுநேரத்தில் ஆலத்தியூர் என்ற கிராமத்தில் காட்டுப் பகுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது எல்லாத்தையும் பார்க்கும்போது காவல்துறையில் பலர் இதுபோன்ற சிந்தனையில் தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
"இதற்கு எல்லாமே காரணம் பணிச்சுமை. ஓய்வு இல்லாத வேலை, அரசாங்கத்தில் வேலை பார்க்கிற எல்லோருக்குமே வார விடுமுறை உண்டு, எங்களை தவிர. உதாரணத்திற்கு சட்டம் ஒழுங்கில் வேலை பார்க்கும் நான் காலை 07.00 மணிக்கு செல்கிறேன் என்றால், பிற்பகல் 02.00 மணிக்கு உணவிற்காக வீடு திரும்ப முடியும். பிறகு 05.00 மணிக்கு ஸ்டேசன் சென்றால் இரவு 10.00 மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும். இதுல எப்போது நான் என் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட நேரம் இருக்கு?" என்றார் நமது காவல்துறை நண்பர்.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, போலீஸாருக்கு வார விடுமுறை மற்றும் மனத்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலைகள் தொடர்வது நிச்சயம்.!