ADVERTISEMENT

சாதித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! ராமதாஸ்

04:25 PM Apr 19, 2019 | rajavel

ADVERTISEMENT

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 91.30% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற, சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சியுடன் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டத்தை திருப்பூர் மாவட்டம் விஞ்சியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஆனால், கடைசி இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் வரிசையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பது தான் மிகவும் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.



அரியலூர், தருமபுரி, திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவாரூர், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் தான் 23 முதல் 32 வரையிலான கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளன. இதே 10 மாவட்டங்கள் தான் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்விலும் கடைசி 10 இடங்களைப் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் ஓரளவு அதிகரித்திருக்கிறது என்றாலும் கூட, தேர்ச்சி விகித தர வரிசையில் பின்தங்கியே உள்ளன.


இவற்றுக்கான காரணங்கள் கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தவை தான். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மாவட்டங்கள் முன்னேற வேண்டுமானால், அதற்காக தொடக்க நடவடிக்கையாக கல்வித்துறையில் இம்மாவட்டங்களை முன்னேற்ற வேண்டிய அவசர, அவசியமாகும். எனவே, வடக்கு மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT