ADVERTISEMENT

சுருக்குமடி வலை பயன்பாட்டால் தொடரும் மோதல்கள்! மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க தடை!

10:03 AM Jul 30, 2019 | kalaimohan

கடந்த 2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் சுருக்குவலை பயன்படுத்தி மீன் பிடிப்பதை முற்றிலுமாக தடை செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த மாதம் சுருக்குமடி வலையை முகத்துவாரத்திற்கு ஏற்றி வந்த லாரிகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடும் போராட்டம் நடத்தி சுருக்குவலை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 90 சதவீத மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துடன் பலமுறை கோரிக்கைகளை வைத்தனர்.

சுருக்குவலை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் திட்டு பகுதியை சேர்ந்த வனக்காளி என்ற படகை சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு படகுகளுக்குள்ளிருந்த வலைகளை முற்றிலுமாக சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பரங்கிப்பேட்டை போர்ட் நோவா துறைமுகத்தில் பதட்டம் நீடிக்கிறது மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சுருக்கு மடி வலை பிரச்சனையால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT