ADVERTISEMENT

செய்தியாளர் மீது தாக்குதல்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

03:02 PM Jan 25, 2024 | mathi23

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் நேற்று இரவு (24-01-24) செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்த விசாரணையில், கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாகக் காவல்துறையின் அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு செய்தியாளர் நேசபிரபு புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேசபிரபுவை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ஊடகச் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், செய்தியாளரை தாக்கிய செய்தி அறிந்து வருந்தினேன். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடப்பதற்கு முன் செய்தியாளர் பாதுகாப்பு கோரியும், நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலில் வைக்கத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT