சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று நேற்று பிற்பகல் சென்றுள்ளது. இந்த ரயிலில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த ஏராளமன மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அதன்படி இந்த ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரயில் நடைமேடையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.