ADVERTISEMENT

கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் செங்கல் சூளைகள் மூடல்... தேர்தலை புறக்கணிக்க தயாராகும் மக்கள்...!

12:22 PM Dec 17, 2019 | Anonymous (not verified)

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிசைத்தொழிலான நாட்டு செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்பட சில பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஓ.பிஎஸ்.-யின் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியிலும் அதை ஒட்டியுள்ள கல்லுப்பட்டி, கைலாசம்பட்டி பகுதிகளில் குடிசைத் தொழிலான நாட்டு செங்கல் தயாரிக்கும் சூளைகள் 65-க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளைகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மண் அள்ளவும், செங்கல் அடுக்கவும், விறகு அடுக்கவும், செங்கல் காய வைக்கவும் போன்ற பணிகளில் வேலை பார்த்துக் கொண்டு வயிற்றை கழுவி வருகிறார்கள்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் தான் இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூடச் சொல்லி கலெக்டர் அதிரடி உத்தரவிட்டதின் பேரில் அனைத்து சூளைகளும் மூடப்பட்டு சூளை உரிமையாளர்களும், கூலித் தொழிலாளர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். இது சம்மந்தமாக செங்கல் சூளை தயாரிப்பு சங்க உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "எனது தாத்தன், பாட்டன் காலத்திலிருந்து இதே பகுதிகளில் தான் செங்கல் சூளைகளை நடத்தி வருகிறோம். இது குடிசைத் தொழில் என்பதால் லைசென்சும் இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு சூளைக்கு ரூ.11,800 கட்டினோம். ஆனால் லைசென்ஸ் இதுவரை கொடுக்கவில்லை.

இதனால் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு மாசு கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து வந்த அதிகாரிகள் புகைக்கூண்டு வைக்க வேண்டும். இல்லையென்றால் சூளையை நடத்தக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் ஒரு சூளைக்கு புகைக்கூண்டு வைக்க வேண்டும் என்றால் அதற்கு பத்து லட்சத்திற்கும் மேல் செலவாகும் அந்த அளவுக்கு எங்களுக்கு வருமானம் இல்லை என்று சொன்னோம். அதற்கு அந்த அதிகாரிகள் புகைக்கூண்டு வைக்கவில்லை என்றால் சூளையை நடத்தக்கூடாது என கலெக்டர் உத்தரவு போட்டு இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனவர்கள். மறுநாளே அனைத்து சூளைகளிலும் உள்ள மின் இணைப்பை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் துண்டித்துவிட்டனர். இதனால் செங்கல் சூளை பணிகள் அனைத்தும் தடைபட்டு போய்விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட செங்கலை விற்கவும் முடியவில்லை.


அறுத்து காயவைக்க வேண்டிய செங்கல்லும் அப்படி அப்படியே மூடிவைத்து விட்டு உடனே சங்க நிர்வாகிகள் எல்லாம் கலெக்டரை பார்க்க போனால் எங்களை அந்த அம்மா பல மணி நேரம் காக்க போட்டுவிட்டு கடைசியில் கூப்பிட்டு அப்பகுதிகளில் செங்கல் சூளை நடத்தக்கூடாது நீங்கள் வேற தொழில் செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அதன்பின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை மூன்று முறை சந்தித்து முறையிட்டு மனு கொடுத்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மற்ற மாவட்டத்தில் உள்ள பகுதிகளான ஆண்டிப்பட்டி, தேனி, போடி, கம்பம், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அப்படியிருக்கும் போது பெரியகுளம் பகுதியில் இருக்கக்கூடிய எங்கள் சூளைகளை மட்டும் கலெக்டர் மூடச் சொன்னதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்கப் போனால் ரோட்டில் புகை வருகிறது. அதனால் விபத்துக்கள் நடக்கிறது என்று கூறி வருகிறார்கள். அப்படி என்றால் மற்ற பகுதிகளில் புகை வரவில்லையா? சூளை வைத்திருப்பவர்கள் எல்லோருமே இரவு 12 மணிக்கு செங்கல் வேக வைக்க தீ வைத்து அதிகாலை ஐந்து மணிக்கு எடுத்துவிடுவோம். அதனால் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அப்படியிருக்கும் வேண்டுமென்றே கலெக்டர் எங்கள் பகுதியில் உள்ள சூளைகளை மூட வைத்துவிட்டார். அதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களை திரட்டி தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து இருக்கிறோம். அதோடு எங்கள் வீடுகளிலும், செங்கல்சூளைகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்போகிறோம் அதோடு வருகிற உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிக்க போகிறோம்" என்று கூறினார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளை பற்றி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, "அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளினால் பள்ளிக்கூடம், மருத்துவமனை பொதுமக்கள் ஆகியோர் இந்த புகையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு விபத்தும் அடிக்கொருக்க நடக்கிறது என்று புகார் வந்ததின் பேரில் தான் விதிமுறைகளை பின்பற்றுங்கள். அதற்குண்டான உதவிகளை கூட செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லையென்றால் நடத்தக்கூடாது என்று கூறினேன்" என்றார். பின்னர் மாவட்டத்தில் உள்ள தேனி, போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம் உள்பட சில பகுதிகளிலும் செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகிறதே என்று கேட்டதற்கு, "அப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம் கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT