ராகுலின் நடைபயணத்தை துவக்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பெண் வங்கி மேலாளர் ஒருவரும் பயணித்தார். அவர், ஸ்டாலினிடம் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பயணித்த அதே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் எழுந்து ஸ்டாலினிடம் பேச வேண்டும் என அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த பெண்ணிடம் எது தொடர்பாக என்று விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த காட்சியை கண்ட முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் விவரத்தை கேட்ட பின்பு அந்த பெண்ணை அருகில் அழைத்து பேச சொன்னதாக சொல்லப்படுகிறது.
அப்போது, முதல்வரிடம்.. சார் என்னை தெரிகிறதா.. நான்தான் கவுசல்யா.. என அறிமுகம் செய்து கொண்ட வங்கி மேலாளர் ஒருவர், 1991 ம் ஆண்டு திமுக பிரச்சாரத்தில் தான் பேசியதை அப்படியே பேசிக் காட்டினார். 1991ம் ஆண்டு, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் இப்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அப்போது, ஸ்டாலினுக்காக கவுசல்யா எனும் பெண் நாடக வடிவில் பிரச்சாரம் செய்துள்ளார். பின்னாளில், கவுசல்யா வங்கி மேலாளராக உயர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.