Skip to main content

என்னால என்ன பண்ணமுடியும்? அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சாட்டையை எடுப்பார் ஸ்டாலின் என்ற கடைசி நம்பிக்கையைத் தந்திருக்கிறது ஜனவரி 21-ல் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி நேரடி தேர்தலில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. அதிக இடங்களை ஜெயித்திருந்தாலும் அந்த வெற்றியில் ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை ஒப்பிடும்போது உள்ளாட்சியில் கிடைத்த வெற்றி எண்ணிக்கை கொண்டாடக் கூடியதாக இல்லை என்றே கட்சியின் மா.செ.க்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார் ஸ்டாலின். அதேபோல மறைமுக தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. சற்று கூடுதல் இடங்களை கபளீகரம் செய்ததையும் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை.
 

dmk



இந்த நிலையில்தான் இதனை ஆராய செயற்குழுவை கூட்டினார் ஸ்டாலின். அதில் கோவை, நீலகிரி, நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தி.மு.க. தோல்வியடைந்திருப்பதால் அந்த மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அதற்கான பதில் இருந்தாலும் பதட்டமும் இருந்தது.

 

dmk



செயற்குழு குறித்து அதில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, "கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் எதிர்பார்த்த வெற்றி நமக்கு கிடைக்கவில்லை. கடந்த முறை கொங்கு மண்டலம்தான் நம் காலை வாரிவிட்டது. இந்த முறையும் அங்கு நமக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது. இந்த தோல்விகளுக்கு என்ன காரணம்? தோற்றுப்போன மாவட்ட நிர்வாகிகள் பேசுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன் என எடுத்த எடுப்பிலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். அவரது கையில் ஒவ்வொரு மாவட்டத்தின் வெற்றி -தோல்வி பட்டியலும், அதற்கான காரணங்கள் அடங்கிய பட்டியலும் இருந்தன.

 

dmk



நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வனும், மேற்கு மா.செ. மூர்த்தியும் பேசும்போது, "நல்ல வேட்பாளர்களை நிறுத்தி, நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து வேலை பார்த்தார்கள். ஆனால், அமைச்சர் தங்கமணியின் அதிகார பலமும், பண பலமும் நம்மை வீழ்த்தி விட்டது. அவருக்கு கட்டுப்பட்டவர்களாகவே தேர்தல் அதிகாரிகளும் வேலை பார்த்தார்கள். நகராட்சித் தேர்தலில் நமக்கு இந்த நிலை வராது'' என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அமைச்சரோடு இவர்களுக்கு இருக்கும் ரகசிய நெருக்கத்தால்தான் தோத்தோம்' என செயற்குழுவின் பின் புறத்திலிருந்து சத்தம் எழுந்தது. அதனை உணர்ந்து தலையசைத்தபடி இருந்துள்ளார் ஸ்டாலின்.

குமரி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உடைந்து போனதால் அந்த மாவட்டத்தின் மேற்கு செயலாளர் மனோ தங்கராஜ், "நாம் போட்டியிட நினைத்த பல இடங்களையும் குறிவைத்து காங்கிரஸ் கேட்டது. நம் பேச்சை மதிக்கவே இல்லை. சிக்கலை தீர்க்கவே முடியவில்லை. கடைசியில் தனியாக போட்டியிட்டு, காங்கிரஸ் நமக்குத் துரோகம் செய்துவிட்டது. கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மதித்து நடந்திருந்தால் நிறைய இடங்களை கைப்பற்றியிருக்கலாம்'' என்றார். அதற்கான வரவேற்பையும் ஸ்டாலின் கவனித்தார்.


கரூர் மாவட்ட தோல்வி குறித்து பேசிய செந்தில்பாலாஜி, "சேலத்தைவிட அதிகளவில் கரூரில் அதிகாரிகளும் அ.தி.மு.க.வினரும் வெளிப்படையாக கைகோர்த்துக் கொண்டு, நாம் பூத்தில் நுழைய முடியாதபடி அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். அ.தி.மு.க.வினரின் தேர்தல் தில்லு முல்லுகள் எப்படி இருக்கும்கிறதை தெரிந்த என்னாலேயே அதை தடுக்க முடியலைங்கிறது வருத்தம் தான்' என்றார். கரூர் மாவட்ட நீண்டகால நிர்வாகிகள் சிலருக்கு பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் அதிகார துஷ்பிரயோகம் அதிகமிருந்ததை சுட்டிக்காட்டிப் பேச, அதனை மறுத்துப் பேசிய சில நிர்வாகிகள், "அ.தி.மு.க.வின ரோடு நம்மாளுங்களுக்கு சில சீக்ரெட் ஒப்பந்தங்கள் இருந்தன. அதனாலேயே தேர்தல் பணியிலிருந்து அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவை தடுப்பதுவரை எதிலுமே கவனம் செலுத்தவில்லை. வெறும் அதிகார துஷ்பிரயோகம்னு சொல்லி கடந்து போய்டமுடியாது. இப்படியே போனா, நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும் சேலம் மாவட்டம் நமக்கு கிடையாது' என புகார் வாசித்தார்கள். இதனை குறிப்பெடுத்துக்கொண்டார் ஸ்டாலின்.


கிழக்கு மா.பொ. வீரபாண்டி ராஜாவோ, "என் மாவட்டத்துல நிர்வாகிகள் யாருமே எனக்கு ஒத்துழைக்கலை. நிர்வாகிகளை தலைமையே நியமிச்சதினால அவங்க என் பேச்சை கேட்பதில்லை. அப்படிப்பட்டவங்கள வெச்சுக்கிட்டு என்னால என்ன பண்ணமுடியும்? இதை பலமுறை தலைமைக்கு தெரிவிச்சும் யாருமே கண்டுக்கலை' என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்த செயற்குழுவும் ராஜாவின் ஆதங்கத்தை சைலண்டாக கேட்டுக் கொண்டிருந்தது.

பேசிய மா.செ.க்கள் பலரும் தோல்விக்கான காரணங்களாக இதே ரீதியிலேயே விளக்கம் தந்தார்கள். மா.செ.க்கள் சிலரின் பொய்யான பேச்சுக்கு நிர்வாகிகள் சிலர் பதிலடியும் தந்தனர். இதனால் செயற்குழு காட்டமாகவே இருந்தது'' என சுட்டிக்காட்டினார்கள்.

மா.செ.க்களின் விளக்கங்களைத் தொடர்ந்து இறுதியில் மைக் பிடித்த ஸ்டாலின், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலம்தாம் முக்கிய காரணம். இப்போது உள்ளாட்சி யிலும் அதே நிலை. இதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இனியும் நான் பொறுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என்னால் அப்படி பொறுமையாக இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் யார், யார் என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்? யார், யாரோடு டீலிங் வைத்திருக்கிறீர்கள்? என்று என்னிடம் பட்டியல் இருக்கிறது. இதை வெளியிட்டு கேவலப்படுத்த வேண்டாமென இருக்கிறேன். இதை உங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். சாதாரணமான புண்ணாக இருந்தால் மருந்து போட் டால் ஆறிவிடும். ஆனா, உங்க நட வடிக்கை ஆறாத வடுவாக இருக்கு. அதற்கு மருந்தெல்லாம் கிடையாது. ஆபரேசன்தான் ஒரே வழி. அந்த ஆபரேசனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். ஏன்னா... இனி நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து நாம் எதிர் கொள்ள வேண்டும். இவற்றில் ஜெயிக்கணும்னா நடவடிக்கை எடுப்பதுதான் சரி. விரைவில் நட வடிக்கை எடுப்பேன். அப்போது அவர்களுக்கு சிபாரிசாக யார் வந்தாலும் அவர்கள் மீதும் நட வடிக்கை எடுப்பேன்ங்கிறதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்'' என மா.செ.க்கள் மீதிருந்த ஒட்டு மொத்த கோபத்தையும் கொட்டித் தீர்த்தார் ஸ்டாலின்.

நிர்வாகிகள் கை தட்டினர். மா.செ.க்களிடம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரிலாக்ஸாகவே இருந்தனர். "தோல்வி குறித்து ஆராய எப்போது கூட்டம் நடத் தினாலும் இதே எச்சரிக்கை யைத்தான் ஸ்டாலின் செய் கிறார். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தவறு செய்தவர்களின் பட்டியல் இருக்கும்போது உடனடி நட வடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.

கட்சியில் இணைந்து 10 வருடம் உழைத்தால் பதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை அடிமட்ட நிர்வாகிகளுக்கு இருந்தால்தான் கட்சி வலிமை யடையும். புதிய உறுப்பினர்கள் வருவார்கள். இல்லைன்னா அடிமட்ட தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் விலை போகத்தான் செய்வார்கள். இந்த முறையாவது தனது எச்சரிக்கையை நடைமுறைப் படுத்தி, மா.செ.க்கள் பலருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்க வேண்டும்‘என்ற குமுறலை, கூட்டத்திற் குப் பிறகு மனம் திறந்து பேசிய செயற்குழு உறுப்பினர்களிடம் கேட்க முடிந்தது.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.