ADVERTISEMENT

ஆயுதங்களுடன் குவிந்த மக்கள்... இரண்டுமுறை போலீசார் துப்பாக்கி சூடு!  

10:00 PM Aug 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் இயற்கை வளங்கள் அழியும் என்றும், இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் கூறி சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவ கிராமத்தைச் சார்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சென்று சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக மற்றொரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று வீராம்பட்டினம் மீனவர்கள் கடற்கரை அருகே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம், "சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஏன் மீன் பிடிக்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகு மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் பைபர் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள் தங்களுடைய கிராம மீனவ மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரை ஓரமாகவே நல்லவாடு மீனவ கிராமத்திற்கு சென்று அப்பகுதி மீனவர்களை தாக்க முற்பட்டனர். அப்போது, இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனையறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவர்களை அமைதிப்படுத்தினர். மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இரு கிராம மீனவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அதன் தொடர்சியாக வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. முகத்துவாரம் அருகே இரண்டு மீனவ கிராம மக்களும் கத்தி, அருவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரு கரையோரம் நின்று ஒருவருக்கு ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதனையடுத்து மீனவர்களை கலைந்து செல்ல எச்சரித்த போலீசார் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மீனவ கிராமங்களுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்ற மோதல் மற்றும் கலவரத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT