குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்த நிலையில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் 50- க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுவித்தனர்.