Skip to main content

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டில் 18 ஆண்டுகள் வேலை செய்த பலே கில்லாடி கைது

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

Bale Gilladi, who worked abroad for 18 years with a fake passport, was arrested!



போலி கடவுச்சீட்டு மூலமாக சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வேலை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர், வடக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும் அதற்கான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக கடவுச்சீட்டு வழங்கல் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய தணிக்கை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், வீரகனூர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். 

 

அதன் பேரில் வீரகனூர் எஸ்.ஐ. தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டிற்குச் சென்று தணிக்கை செய்துள்ளார். அப்போது வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்பதும் அவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. வீரமுத்துவின் பெயரில் அவருடைய உறவினரான உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் போலியாகக் கடவுச்சீட்டு எடுத்து சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. 

 

ஆள்மாறாட்டம் செய்து போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் எஸ்.ஐ. தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் போலி கடவுச்சீட்டு, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். 

 

ராஜேஷ் எப்போது தமிழகம் திரும்பினாலும் அவரைக் கைது செய்ய காத்திருந்த காவல்துறையினர் சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடுதல் அறிவிக்கை (லுக் அவுட்) வழங்கி இருந்தனர். காவல்துறையினர் வலை விரித்துக் காத்திருப்பதை அறியாத ராஜேஷ், நவ. 13 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் காவலர்கள் குழு திருச்சி சென்று ராஜேஷை கைது செய்தனர். அவரை சேலம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

கடந்த 2002 ஆம் ஆண்டு, வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை திருடிய ராஜேஷ் அதன்மூலமாக போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிறைவடையாததால் வீரமுத்துவின் பெயரிலேயே போலியாக கடவுச்சீட்டு பெற்று சிங்கப்பூருக்கு பறந்துள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடைய கடவுச்சீட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. அதைப் புதுப்பிக்க முயன்ற போதுதான் காவல்துறையில் வசமாக சிக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான ராஜேஷை சேலம் மாவட்ட 6-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் ராஜேஷை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
World's Most Powerful Passport List; Do you know how many places in India?

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசையை, சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில், விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் ‘சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ என்று கருதப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. 

அந்த வகையில், இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளனர். அதாவது, இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். இதையடுத்து, இரண்டாவது இடங்களை பிடித்துள்ள தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். 

இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். அதனை கருத்தில் கொண்டு இந்த நாடுகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில், சீனா 62வது இடத்தையும், இந்தியா 80வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, உள்ளிட்ட சுற்றுலா நாடுகளும் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த தரவரிசையில் 101வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈராக் 102வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்தையும் பிடித்துள்ளது.