ADVERTISEMENT

நள்ளிரவில் செல்லும் 'கார்' பயணிகள் குறிவைக்கப்படுகிறார்களா? - எஸ்.பி. எச்சரிக்கை!

05:27 PM Dec 29, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு வீடியோ காட்சி பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. அந்த வீடியோ காட்சியில், " ‘சென்னை - திருச்சி', 'விக்கிரவாண்டி - உளுந்தூர்பேட்டை' ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் எச்சரிக்கை! விக்கிரவாண்டி உளுந்தூர்பேட்டை இடையே, நள்ளிரவு கார் பயணத்தின்போது, பின்தொடர்ந்துவந்த மர்ம நபர்கள் காரை சேதப்படுத்துகின்றனர். சத்தம் கேட்டு கார் ஓட்டுனர், காரை விட்டு இறங்கியதும் அவரை அடித்துப் போட்டுவிட்டு காரில் உள்ள பெண்கள் மற்றும் அங்குள்ளவர்களிடம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறது அந்தக் கும்பல்" இவ்வாறு அந்த வீடியோ காட்சி இருக்கிறது.

இதேபோல, ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்ததாக, ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்து வீடியோவை வெளியிட்டிருந்தார். தன்னுடைய மாமனார் காரில் செல்லும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தது என்றும் அவர் காரை நிறுத்தாமல் வேகமாகத் தப்பிச்சென்று விட்டதாகவும் அந்த வீடியோ, ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் பயணம் செய்பவர்கள் அச்சப்பட்டனர். இந்த ஆடியோ, வீடியோ தகவல்கள் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவுப்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இது தவறான தகவல் என்றும் தெரியவந்தது. மேலும், அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எந்தப் புகாரும் காவல் நிலையங்களில் பதிவாகவில்லை. நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் உள்ளனர். அவர்கள் அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. ராதாகிருஷ்ணன் “விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை காரில் செல்பவர்களை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து (முகமூடி அணிந்து) வரும் நபர்கள் வழிப்பறி செய்வதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தவறான தகவல். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அந்த வீடியோவையும் ஆடியோவையும் யாரும் நம்பவேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சம்பந்தமே இல்லாமல், எப்போதோ எங்கோ நடந்த சம்பவங்களை சமீபத்தில் நடந்ததாகக் கூறி வெளியிடுகிறார்கள். அவைகளை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் அந்தச் சம்பவம் உண்மையா? எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பதைப் பற்றி எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், அப்படியே பல்வேறு குழுக்களுக்கும் பரப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால், பொய்ச் செய்திகள் அதிக அளவில் பரவுகின்றன. அதேசமயம், உண்மையான செய்திகள் வரும்போது அதை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். காவல்துறையினர், இதுபோன்ற பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை வெளியிட்டு வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT