ADVERTISEMENT

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கூறிவிட்டு இளைஞர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

10:29 AM May 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்ராஜ் (வயது 28). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய அக்காவுக்கு ஏற்கனவே திருமணமாகி தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுதன்ராஜ் தனது தம்பி சுரேந்தருடன் வசித்து வந்தார். சுதன்ராஜுக்கும் அவருடைய அக்கா கணவரின் தங்கைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சுரேந்தர் வெளியில் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுதன்ராஜ் தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மணப்பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். ஆனால், அதனை அந்த மணப்பெண் விளையாட்டாக எடுத்துக் கொண்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்த சுரேந்தர், தனது அண்ணன் சுதன்ராஜ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுதன்ராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக சுதன்ராஜ் மணப்பெண்ணிடம் சொல்லிவிட்டு தான் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் சுதன்ராஜ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடமே கூறிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT