ADVERTISEMENT

மின்கம்பம் விழுந்து முதுகுத் தண்டுவடம் பாதிப்பு!- ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

10:09 PM Nov 26, 2019 | santhoshb@nakk…

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் கடந்த 2009- ஆம் ஆண்டு காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மின் கம்பம் சரிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். பழுதான மின் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்த போது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஆனந்தகுமாரின் முதுகுத் தண்டுவடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ஆனந்தகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT


வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை மாநகராட்சிக்கு 4.7.2019 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட ஆனந்தகுமார் சக்கர நாற்காலியில் ஐகோர்ட்டுக்கு நேரில் வந்து தனது தரப்பு கோரிக்கையை எடுத்து வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

திருமணம் செய்து கொள்வதும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதும் அவரவர் விருப்பம். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், ஆனந்தகுமார் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் திருமணம் செய்துகொள்ளும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு ஆனந்தகுமார் தள்ளப்பட்டுள்ளார்.


அவர் தனது விருப்பத்துக்கு மாறாக பேச்சிலர் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்து வருகிறார். அவரால் நடக்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. இன்னொருவர் உதவி இல்லாமல் இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாது.எனவே பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு 63 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும். இழப்பீட்டுத் தொகையில் ரூ 10 லட்சத்தை ஆனந்தகுமாரின் வங்கிக் கணக்கில் மாநகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை நிரந்தர வைப்புத் தொகைக் கணக்கில் வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஆனந்த குமாருக்கு வழங்க வேண்டும். ஆனந்தகுமாரின் ஊனத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகைக்காக வருமான வரி பிடித்தம் எதுவும் செய்யக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT