ADVERTISEMENT

பாய்லர் வெடித்து ஊழியர் பலி; நிவாரணம் அறிவிப்பு

11:44 PM Dec 27, 2023 | prabukumar@nak…

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில் இன்று (27-12-2023) இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியது. இது தொடர்பாகத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தில், பாதிப்புக்குள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணா என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை பகுதியைச் சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஊழியர் பெருமாளின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT