ADVERTISEMENT

பெரிய கோவில்களின் உபரி நிதியிலிருந்து ரூ.10 கோடி பெற வேண்டியது ஏன்? – விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு!

11:26 PM Sep 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறையிடம் 488 கோடி ரூபாய் நிதி இருக்கும் நிலையில், பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயைப் பெற வேண்டியது ஏன் என்பது குறித்து, நாளை (அக்டோபர் 1) விளக்கமளிக்க அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமக் கோவில்களின் மேம்பாட்டுக்காக, பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயைச் செலுத்தும்படி, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கோவில் உபரி நிதியைப் பெற அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் மட்டுமே அளிக்க முடியும். அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும். அறநிலையத் துறையிடம் 488 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், கோவில் உபரி நிதியில் இருந்து கொடுக்க வேண்டியதில்லை. பயன்பெறும் ஆயிரம் கோவில்களின் பட்டியலை வெளியிட வேண்டும். கோவில்களின் பூஜை உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் போதுமானதாக இருக்கும். கோவில்களை சீரமைக்க இந்த நிதி போதாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் -


• பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து பெறப்படும் 10 கோடி ரூபாய் நிதியில் சிறிய கோவில்களின் சீரமைப்பு எப்படிச் செயல்படுத்தப்பட உள்ளது?


• எந்த அடிப்படையில் ஆயிரம் கிராமக் கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது?


• அறநிலையத் துறையில் 488 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் பெறுவது ஏன்?


• சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எந்தெந்த கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன?


எனக் கேள்வி எழுப்பி, நாளை விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது அரசின் இலவசத் திட்டங்கள் போல இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT