தமிழகம் முழுவதும் நடைபெறும் சிலை கடத்தலை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி மகாதேவன் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பான 23 வழிமுறைகளை அரசுக்கு பிறப்பித்தார்.
ஆனால் ஒரு வருடமாகியும் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் அமைப்பது தொடர்பான உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என கடந்த வாரம் நீதிபதி குற்றம் சாட்டியதுடன் ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைப்பது குறித்த அட்டவணையை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகவும், அட்டவணையை தாக்கல் செய்வதற்கும் அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கேட்டகப்பட்டது. அதனை ஏற்று வழக்கை ஜூலை 13-ஆம் தேதிக்கு நீதிபதி மகாதேவன் ஒத்திவைத்தார். அப்போது மனுதாரரான யானை ராஜேந்திரன், நாகை கோனேரிராஜபுரம் கோவிலில் அன்னப்பூரணி சிலை மாயமாவதாகவும், நடராஜர் உள்ளிட்ட உற்சவர் சிலைகள் பாதுகாப்பு இல்லாத அறைகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
அப்பொழுது மற்றொரு மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே சிலை கடத்தல் தொடர்வதாகவும், ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் மாயமாகிறது, மரவேலைப்பாடுகள் சிதைக்கப்படுகிறது, பழங்கால பொருட்கள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமான மின்னஞ்சல் புகார் கொடுத்தும் இதுவரை இந்து சமய அறநிலைத்துறை திருட்டை தடுப்பதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
அப்போது, நீதிபதி குறுக்கிட்டு தனக்கும் புகார்கள் வருவதாகவும், அண்ணாமலையார் கோவிலில் பஞ்சலோக சிலை கூட திருடப்பட்டதாக செய்திகள் வந்ததாக குறிப்பிட்டார். சிலை கடத்தல் தொடர்வது அரசின் நிர்வாகத் திறமை குறைபாட்டையே காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். சைவமும், வைணவமும், மொழியும், கலாச்சாரமும் தழைத்தோங்கும் இந்த மண்ணில், இதுபோன்ற சிலை கடத்தல் தொடருமேயானால் அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என் கூறிய நீதிபதி, முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்படும் என தமிழக அரசை எச்சரித்தார்.