ADVERTISEMENT

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! - உயர்நீதிமன்றம் மறுப்பு! 

07:59 AM Jan 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து, தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இருவர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏற்கனவே சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இதுபோல இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொருளாதார ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத் தக்கதல்ல என்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரினார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு, அந்த இடங்களில் 20 இடங்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடந்து வரும் நிலையில், பொது நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இந்த வழக்குகளில், 15 நாட்களில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய, தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT