ADVERTISEMENT

மின்சார கட்டணம் போல், குடிநீர் பயன்பாட்டை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும்: கோவை மாநகராட்சி

06:43 PM Jul 25, 2018 | Anonymous (not verified)


கோவை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீருக்கு பயன்பாட்டின் அடிப்படையில் மின்சார கட்டணம் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகம் முழுவதும் பெருநகரங்களில் பொதுமக்களுக்கு குடிநீரை வினியோகிப்பது பெரும் சவாலாக இருந்து வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு அதில் அனுபவம் கொண்ட தனியார் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான உரிமம் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.


அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீரை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் மின்சார கட்டணம் போல் குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்படும். வீடுகளின் சதுர பரப்பளவு கணக்கின் படி இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும். குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என்ற கருத்து ஆதாரமற்றது. சொத்துவரி நிர்ணயம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளது.

பல மாநிலங்களை காட்டிலும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர், 24 மணி நேர குடிநீர் வினியோகத்திற்கான தொழில்நுட்பங்களை அறிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இல்லை என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT