Skip to main content

உரக்கிடங்காக உருமாறி வரும் மாநகராட்சி பள்ளிக்கூடம்! குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அபாயம்!!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

சேலம் மாநகராட்சியில் ஊருக்கு நடுவே நுண்ணுயிரி உரக்கிடங்கு திறக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இப்போது பள்ளிக்கூடத்தை மூடி உரக்கிடங்கைத் திறக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சம் கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே செட்டிச்சாவடியில், 100 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் கொட்டவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டது. 
 

salem corporation schools and childrens fertilizer plant peoples



ஆனால், 2014ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு செயல்பட்டு வந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு சாம்பலானது. இந்த தீவிபத்தே கூட ஆளும் அதிமுக தரப்பினரே கமிஷனுக்காக செய்த சதி திட்டம்தான் என்ற பேச்சும் அப்போது எழுந்து அடங்கியது.


இந்த நிலையில்தான், சேலம் மாநகராட்சி பொலிவுறு நகரமாகும் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, நாள்தோறும் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, காய்கறிக் கழிவுகள், இலைதழைகள் போன்ற மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 


உண்மையில், நுண்ணுயிரி உரத்தயாரிப்புத் திட்டம் வரவேற்கக்கூடியதுதான். என்றாலும், இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இடங்களுமே கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. டிவிஎஸ் சுடுகாடு சாலையிலும், ஜான்சன்பேட்டையிலும் ஊருக்கு நடுவே அமைக்கப்பட்ட உரத்தயாரிப்பு கூடத்தால் ஈக்கள், கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் பரவுவதாகவும், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் கெட்டுப்போவதாகவும் புகார்கள் எழுந்தன. இவற்றை எதிர்த்து மக்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை மறியலும் நடத்தினர்.
 

salem corporation schools and childrens fertilizer plant peoples



முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், வழக்கம்போல் காவல்துறையினரைக் கொண்டு, மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிவிட்டனர். ஆனாலும், மாநகராட்சி உரக்கிடங்குகளுக்கு இப்போது வரை எதிர்ப்பு வலுத்து வருகிறது.


இது ஒருபுறம் இருக்க, 15வது கோட்டத்திற்கு உட்பட்ட ராம் நகரில், முன்பு மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்ததால், இப்போது அந்தப்பள்ளிக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு, நுண்ணுயிரி உரத்தயாரிப்புக் கூடம் கட்டும் வேலைகளில் சேலம் மாநகராட்சி இறங்கி உள்ளது. இதுவும் ராம் நகர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

salem corporation schools and childrens fertilizer plant peoples



இதே வளாகத்தில்தான் குப்பை லாரிகள், பழுந்தடைந்த கனரக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருவது ஆகப்பெரும் வேடிக்கை.


குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறியதாலும், உரக்கிடங்கு வருவதாலும், இந்த வளாகத்திற்கு அருகில் இயங்கி வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அடியோடு சரிந்து விட்டது. நடப்பு ஆண்டில், கடந்த ஆகஸ்ட் வரை 15 குழந்தைகள் படித்து வந்த நிலையில், சுகாதாரச் சீர்கேடு காரணமாக 5 குழந்தைகள் இப்பள்ளியை விட்டு பாதியிலேயே வெளியேறியுள்ளனர். 


இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலரும், பாஜகவின் முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன் நம்மிடம் பேசினார்.
 

salem corporation schools and childrens fertilizer plant peoples


''நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் கிடங்குகளை ஊருக்கு வெளியிலோ அல்லது சுடுகாட்டுப் பகுதியிலோதான் அமைக்க வேண்டும். இப்படி ஊருக்கு நடுவே அமைப்பதால் துர்நாற்றம் வீசுவது ஒருபக்கம் இருந்தாலும், கொசுக்கள், ஈக்களால் குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.


இப்படி எல்லாம் செயல்பட சேலம் மாநகராட்சிக்கு யார் யோசனை சொல்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் இதை தட்டிக்கேட்காமல் மவுனம் சாதி க்கின்றன. இந்த வளாகத்திற்கு வெளியே செயல்படும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பத்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் காரணமாக பெற்றோர்கள், இந்தப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முன்வருவதில்லை. இந்தப்பள்ளியில் முதல் மற்றும் 3ம் வகுப்பில் தலா ஒரு குழந்தையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் தலா 2 குழந்தைகளும், இரண்டாம் வகுப்பில் மட்டும் அதிகபட்சமாக 4 குழந்தைகளும் என மொத்தமே 10 குழந்தைகள்தான் படிக்கின்றனர்.


இதேநிலை நீடித்தால், அடுத்த ஆண்டில் இந்தப்பள்ளியையும் மூடி, அங்கேயும் உரத்தொழிற்சாலை கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 15வது கோட்டத்திற்கென்று, மாநகராட்சி சார்பில் இந்த ஒரு பள்ளி மட்டுமே செயல்படுகிறது. 1896ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியும் குப்பை வண்டிகள், உரக்கிடங்கால் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. இதையும் மூடிவிட்டால் அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதே கனவாகி விடும். உடனடியாக ராம் நகரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் உரக்கிடங்கு அமைக்கப்படுவதை கைவிட வேண்டும். இங்குள்ள குப்பை வண்டிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்,'' என்றார்.

salem corporation schools and childrens fertilizer plant peoples


குப்பை வண்டிகள் நிறுத்தப்படுவதாலும், வளாகம் முழுவதும் புதர்ச்செடிகள் மண்டிக்கிடப்பதாலும் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்து விடுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகுதான், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தனது தொகுதி நிதியில் இருந்து ராம் நகர் துவக்கப்பள்ளிக்கு பாதுகாப்பு சுவர் கட்டிக்கொடுத்துள்ளார். அதில் தனது முயற்சியும் அடங்கி இருப்பதாகச் சொன்னார் தாதை சிவராமன்.


ராம்நகரைச் சேர்ந்த குடும்பத்தலைவி சத்யா, ''என் கணவர் தையல் வேலைக்குச் செல்கிறார். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். என் வசதிக்கு இந்த மாநகராட்சி துவக்கப்பள்ளியில்தான் என் குழந்தையைப் படிக்க வைக்க முடியும். ஆனால், இப்போது பக்கத்து வளாகத்தில் உரக்கிடங்கு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே குப்பை வண்டிகளால் துர்நாற்றம் வீசுகிறது. 


அதனால்தான் பலர் இங்கிருந்து குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க அழைத்துச் சென்றுவிட்டனர். இன்னும் உரக்கிடங்கெல்லாம் வந்தால் இந்தப்பள்ளியில் இப்போதுள்ள பத்து குழந்தைகள்கூட படிக்க வர மாட்டார்கள். இங்கு உரக்கிடங்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்றார். 


சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''பரந்து விரிந்து கிடக்கும் செட்டிச்சாவடி அருகே உரக்கிடங்கு தயாரிக்கலாம் என்ற திட்டமும் பரிந்துரை செய்தோம். ஆளுங்கட்சியினர் எங்கே விடுகிறார்கள்? அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் எல்லாம் நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களை மீறி அதிகாரிகளால் என்ன செய்துவிட முடியும்? மேற்கொண்டு இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை,'' என்று பட்டும் படாமலும் முடித்துக்கொண்டார்.


இருப்பதையாவது காப்பாற்ற வேண்டாமா என்ற பரிதவிப்பில் சாமானியர்களும், யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன... நம் கடன் கல்லா கட்டுவதே என்ற சர்வாதிகாரப் போக்கில் ஆளும் அதிமுகவும், சேலம் மாநகராட்சியும் கைகோத்து செயல்பட்டு வருகிறது. 


 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.