குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் நடை, வேலூரில் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது. சென்னையிலும் பரவலாக மழை பொழிந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கோவை, சேலம், தருமபுரி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (15.04.2021) கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களிலும் புதுவையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.