கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதத்துடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயரதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை, உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காவல்துறையினரைப் பார்த்த பிறகு காரை வெடிக்கச் செய்தாரா? வேகமெடுக்கும் விசாரணை
“இதைப் பற்றி முதல்வர் பேசாதது கடுமையான கண்டனத்திற்கு உரியது” - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
• கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும்;
• கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும் கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்;
• மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும்;
• இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும் அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும் அவர்களை ஊக்குவித்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) செள. டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.