கடந்த எட்டு வருடங்களாக திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து, இந்த வருடம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒன்பதாவது புத்தக திருவிழா திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது.
மாவட்ட நிர்வாகமும், இலக்கிய களமும் இணைந்து புத்தகத் திருவிழாவை அக்டோபர் 6- ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16- ஆம் தேதி வரை நடத்த இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் நக்கீரன் பதிப்பகம் உள்பட 60- க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மூலம் 122 புத்தக ஸ்டால்கள் போடப்பட்டிருக்கிறது. இதில் 93- வது ஸ்டாலாக நக்கீரனும் இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஸ்ரீமதி திறந்து வைத்தார். அதன் பின் புத்தகத் திருவிழாவில் உள்ள பல புத்தக ஸ்டால்களுக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டு படித்தும் பார்த்தார்.
விழாவில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, "நான் சிறுவயதில் இருந்தபோது புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. கையில் பணம் கொடுத்தாலே புத்தகத்தை வாங்குவதற்கு மனம் விரும்பும். என் வீட்டில் புத்தகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. திருமணத்திற்கு முன்பு என் அம்மா திருமண சீதனமாக புத்தகம் தான் தரப்போகிறேன் என்று கூறினார்; சரி என்று சம்மதித்தேன். என் கணவருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருந்தது. எனக்கு மகிழ்ச்சியே அளித்தது. பிறந்த வீட்டு சீதனமும், புகுந்த வீட்டு சீதனமும் எனக்கு புத்தகம் தான். இந்த கண்காட்சியை பார்க்கின்ற பொழுது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், இலக்கிய களம் தலைவர் மனோகரன், இலக்கிய களம் செயலாளர் கண்ணன், கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார். மாவட்ட காவல்துறை எஸ்.பி.பாஸ்கரன், டி.ஆர்.ஓ.லதா, ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் அருண்மணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும், இலக்கிய களம் பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.