ADVERTISEMENT

அதிமுகவின் அடையாளத்தை 'கபளீகரம்' செய்த பாஜக!

12:18 AM Apr 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது ஆளும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கும் தான். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூன்ஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க மற்றுமுள்ள கட்சிகள் அவர்கள் போட்டியிடாத இடங்களிலும் தங்களின் கொடி மற்றும் கரைவேட்டி, துண்டு போன்ற அடையாளத்துடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார்கள், களப்பணியாற்றுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரின் சுய அடையாளத்தைக் காட்டாமல் அவர்களுக்கும் காவி உடை அணிய வைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களைக் காவிப் படையாக மாற்றிவிட்டது. பா.ஜ.க.

குறிப்பாக மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அரவக்குறிச்சி, தாராபுரம், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியைத் தவிர பா.ஜ.க.வுக்கு தொண்டர்களோ, அமைப்பு பலமோ மற்ற மூன்று தொகுதிகளிலும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்கிறார்கள். இதில் தான் பா.ஜ.க.வின் சூது வெளிப்படையாகத் தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத (தற்போது சீட் கிடைக்காத) சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் வேதனையுடன் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த நான்கு தொகுதிகளிலும் பா.ஜ.க தனியாக நின்றால் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டாயிரம், ஐயாயிரம் அதிகபட்சம் பத்தாயிரம் வாக்குகளைத் தான் அவர்களால் பெறமுடியும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் ஒட்டு வங்கியான 30 சதவீதத்தை அப்படியே பெறப் போகிறார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.கவினர் பா.ஜ.க.வுக்காக களப் பணியாற்றுகிறார்கள். எங்களது ஊராட்சி கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பூத் கமிட்டியினர், அதாவது ஒரு பூத்துக்கு ஆண்கள் 25, பெண்கள் 25 பேர் என எல்லோரையும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் முதல் பதவி பொறுப்புக்குத் தகுந்தாற்போல் சிலருக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் வரை வேட்பு மனுத் தாக்கலுக்கு அடுத்த நாளே பா.ஜ.க.வினர் வாரி வழங்கி விட்டனர். அது தவிர ஒவ்வொரு நாளும் செலவுக்குத் தனியாக தந்து விடுகிறார்கள். இதுதவிர ஒரு ஒட்டுக்கு தலா இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை தாராளமாகக் கொடுக்கிறார்கள். பா.ஜ.க தொகுதிகளுக்கு பலகோடி ரூபாய் கர்நாடகாவிலிருந்து தான் இறக்குமதியானது. இப்படியெல்லாம் கொடுத்து எங்க நிர்வாகிகள், தொண்டர்களை பணத்தால் மயக்கி மக்களிடம் எப்படி ஒட்டு கேட்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்? அதாவது நம்ம ரெட்டை இலை சின்னம் தான் இப்ப தாமரை... இனி தாமரை தான் நம்ம சின்னம். ரெட்டை இலைக்கு பதிலா தாமரை தான் எனப் பிரச்சாரம் செய்ய வைத்திருக்காங்க. கூட்டணிக் கட்சி சின்னம்னு எங்கேயும் சொல்றதில்லே. மொடக்குறிச்சியில பூந்துறையில இருக்குற தலித் காலனியில ஒட்டுக் கேட்கும்போது ஒரு மூதாட்டி ஏப்பா எம்.ஜி.ஆரு, ஜெயலலிதாம்மா சின்னம் தானே ரெட்டை இலை அது இல்லையானு கேட்டது, அதுக்கு எங்க ஆளுக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா சின்னமான ரெட்டை இலை தான் இப்போ தாமரை சின்னம்னு அந்தம்மாவுக்கு புரிய வெச்சாங்க. சரி பா.ஜ.க. ஓட்டு வாங்கறதுக்குத்தான் இப்படியெல்லாம் பேச வைக்குதுனு ஒதுங்க முடியலே.

காரணம் எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோருக்குமே காவித் துண்டு போட்டு விட்டார்கள். கருப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை என்ற கரை போட்ட துண்டுகள் யார் கழுத்திலும் இல்லை. சிலர் வேட்டியே காவி கலர்லே தான் கட்டிகிட்டு வர்றாங்க அந்த அளவுக்கு பணம் கொடுத்து மூலை சலவை செய்திட்டாங்க. ஓட்டுக் கேட்க போகும் போது அ.தி.மு.க. அடையாளமான துண்டு அணியாமல் காவித் துண்டு போடுவது வேதனையளிக்கிறது. பாருங்க தாராபுரத்துல பிரதமர் மோடி கலந்துகிட்ட கூட்டத்துல கூட முதல்வர், துணை முதல்வர் கலந்து கிட்டாங்க, அனா அதுல கூட அ.தி.மு.க.அடையாளம் இல்லாமல் எல்லாமே காவி மயமாகத்தான் இருந்தது.

இவுங்க தேர்தலே ஜெயிக்கறாங்களோ, தோக்கறாங்களோ.. ஒன்னுல உறுதியா ஜெயிச்சுட்டாங்க அ.தி.மு.க. நிர்வாகிகள், அடிமட்ட தொண்டன், வாக்காளர்கள் வரை எல்லோரையும் காவி மயமாக்கிவிட்டனர். இவர்கள் போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமைப்பு பா.ஜ.க.வுக்குள் கலந்துவிட்டது. இது ஒன்னரை கோடி தொண்டன் உள்ள அ.தி.மு.க.வுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது" எனப் பரிதாபமாகக் கூறினார்.

வெற்றி, தோல்வி ஒரு புறம் இருந்தாலும் காவியும், தாமரையும் கிராமங்கள் தோறும் கொண்டு சென்றதும் அ.தி.மு.க.வினர் பலரை பா.ஜ.க. சிந்தனைக்குக் கொண்டுவந்து இந்த தேர்தல் மூலம் அமைப்பு ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க. என்பதை மறுப்பதற்கில்லை. இதுகுறித்து பாஜகவினருடன் சென்ற அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது, ''இப்படிப் எங்களை குறைசொல்லும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என்றால் தோப்பு வெங்கடாச்சலம் மாதிரி முடிவெடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என போராடி கட்சித் தலைமையிடம் வாங்கியிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டார்கள். இப்பொது எங்களைக் குறை சொல்லுகிறார்கள். தேர்தல் பணிகளைக் கவனிக்க கட்சி மேலிடம் எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்குக் கொடுக்குமாறு ஒரு தொகையைக் கொடுத்தது. அதனை அதிமுக போட்டியிடாத தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்ஏக்களும், எம்.பிக்களும் எங்கள் கண்ணில் காட்டவில்லை. பஸ் செலவுக்கோ, பைக்கிற்கு பெட்ரோல் போடவோ, டீ செலவுக்கோ, சாப்பாடு செலவுக்கோ காசு வேண்டுமா வேண்டாமா? எங்களைக் குறைசொல்லும் நிர்வாகிகள், அவர்களே முன்னின்று பிரச்சாரத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டியதுதானே. அப்படி எங்களை அழைத்துச் சென்றிருந்தால், இப்படி அவர்கள் புலம்பத் தேவையில்லை. நாங்கள் தொண்டர்கள். எப்பொழுதும் எம்.ஜி.ஆர் விசுவாசியாக, ஜெயலலிதா விசுவாசியாக இருப்போம். எங்களைக் குறைசொல்லும் மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு மாறாமல் இருந்தால் சரி'' என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT