ADVERTISEMENT

அனுமதியின்றி பேனர் வைத்த 44 பேர் மீது வழக்கு... உயர்நீதிமன்ற எதிரொலி

09:40 AM Sep 14, 2019 | santhoshkumar

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக செப் 12ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்தது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பினார்கள். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று மதியம் ஆஜராகினர். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

அவர்களிடம் பேனர் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர். உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? ஏதாவது நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர் வைத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்களை எடுக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT