இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் (03.03.2024) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது மற்றும் கிருமி நாசினியான சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் குழுக்கள் மூலமாகத் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.