ADVERTISEMENT

கொலை வழக்கில் சாட்சி சொன்னவரை கடத்தி கொலை செய்ய முயற்சி...

03:21 PM Oct 08, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி குருமாம் பேட் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் 25வயது அரவிந்த். இவர் சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் தமிழக பகுதியான பூத்துறை இந்திரா நகரில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரவிந்தை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து அரவிந்தனின் நண்பர்கள் வானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

வானூர் இன்ஸ்பெக்டர் சித்ரா, வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கடத்தி சென்றவர்களை விடிய, விடிய தேடினார்கள். இந்த நிலையில் மறுநாள் காலை அரவிந்த், மங்கலம் அய்யனார் கோவில் அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று அரவிந்தனை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரவிந்தனை திடீரென கடத்துவதற்கு காரணம் ஏன் என்று வானூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் விசாரணையில் 2017ஆம் ஆண்டு புதுச்சேரி குருமாம்பம் பேட்ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் என்பவர் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். அவருக்கு நீதிமன்றம் காரைக்கால் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்துப் போடுமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கார்த்திக் காரைக்காலில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜெகன் தம்பி ராஜேஷ் தன் அண்ணனை கொலை செய்த கும்பலை பழித்தீர்க்க திட்டம் தீட்டி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கார்த்திக் ஆதரவாளரான அரவிந்தை மிரட்டி காரைக்கால் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அரவிந்த் மூலம் போன் செய்து காரைக்கால் புளியங்கொட்டை சாலை பகுதிக்கு கார்த்திகை வரவழைத்த ராஜேஷ் தலைமையிலான கும்பல் கார்த்திக்கை வெட்டிக் கொலை செய்துள்ளது.

இந்த வழக்கில் ராஜேஷுக்கு எதிராக அரவிந்த் கோர்ட்டில் சாட்சி அளித்துள்ளார். இதில் ராஜேஷ் உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைத்துள்ளது. மேலும், மேல்முறையீடு செய்து தற்போது அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ராஜேஷ், தனக்கு எதிராக அரவிந்த் நீதிமன்றத்தில் சாட்சி அளித்து தண்டனை கிடைக்க காரணமாக இருந்த காரணத்தால் ராஜேஷ் அரவிந்தை கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வானூர் போலீசார் கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT