ADVERTISEMENT

சசிகலா பினாமி எனச் சொத்துகளை முடக்கிய வழக்கு!- வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:54 AM Jun 26, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

சசிகலாவின் பினாமி எனக் கூறி, தனது சொத்துகளை முடக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நிதி நிறுவன உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க, வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம், சென்னை பெரம்பூரில், ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டிடத்தைக் கட்டியது. இந்த மாலின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு கடையையும், 11 சதுர அடி நிலத்தையும் வாங்கியவர், நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே.தினகரன்.

கடந்த 2017- ஆம் ஆண்டு, சசிகலாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள சொத்துகளை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சியை பெற்றிருந்ததாகவும், வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வி.எஸ்.ஜே.தினகரனை சசிகலாவின் பினாமி எனக் கூறி, ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், வி.எஸ்.ஜே. தினகரன் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளரிடம் இருந்து வாங்கிய தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுவுக்கு இரண்டு வாரங்களில், அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT