ADVERTISEMENT

சாலையில் காயவைக்கப்பட்ட தானியங்கள்... வழுக்கிவிழுந்து பெண் உயிரிழப்பு... 

04:21 PM Sep 14, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

அரியலூர் மாவட்டம் சிலுப்பனூரைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி சாந்தி (46) இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் அமுதரசன் தனது டூவீலரில், சிலுப்பனூரில் இருந்து விருத்தாசலம் வழியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நீண்ட தூரத்திற்கு கம்பு கதிர்கள் சாலையில் அடிப்பதற்காக பரப்பி வைத்துள்ளனர். அமுதரசன் ஓட்டிச் சென்ற பைக் அந்த கம்பு கதிர்கள் மீது ஏறிச் சென்றது.

ADVERTISEMENT


கம்பின் வழுவழுப்புத்தன்மையால் டூவீலர் வழுக்கிவிட்டது. இதனால் பைக் நிலைத்தடுமாறி கீழே சாய்ந்தது. பைக்கில் இருந்து கீழே விழுந்தார் சாந்தி. அந்தநேரம் பார்த்து சேலம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாந்தி மீது பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாந்தி உயிரிழந்துள்ளார். அமுதரசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சாந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும், இதேபோன்று விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம்- தொழுதூர், விருத்தாசலம்- ஜெயங்கொண்டம், விருத்தாசலம்- சிதம்பரம், விருத்தாசலம்- கடலூர், விருத்தாசலம்- சேலம் இப்படி விருத்தாசலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பெரும்பாலான சாலைகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைந்த நெல் மணி, சோளம், கேழ்வரகு, கம்பு, எள் ஆகிய தானிய கதிர்களைச் சாலையில் உலர வைக்கின்றனர். அதன்மீது வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதால் அதன் சக்கைகள் சாலையிலேயே விடப்படும். எஞ்சிய தானியங்களைக் காற்றில் தூற்றி சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தானியங்களைத் தூற்றும்போது அதன் தூசுகள் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் கண்களில் பட்டு வாகன விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. அதேபோல் தானியங்களைச் சாலையில் பரப்பி அதற்கு தடுப்பு நடவடிக்கையாக பெரிய பெரிய கற்களைச் சாலையின் குறுக்கே கண்டபடி வைக்கிறார்கள். இந்தக் கற்கள் மீது வாகனம் மோதி விபத்து, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தானியங்களை சாலையில் காய வைத்து அதன் கதிர்களை அடிப்பதால் அதன் மீது ஏறிச் செல்லும் இருசக்கர வாகனங்கள், தானியங்களின் வழுவழுப்பினால் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுவது ஒரு தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது.

சாலையில் தானியம் காயவைப்பதாலும் அதை அடித்து தூற்றுவதாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே சாலையை ஆக்கிரமித்து தானியங்களைக் காயவைப்பதும், அதை அடித்து தூற்றுவதும் சட்டப்படி குற்றம் என்பதை விவசாயிகள் உணர வேண்டும் எனக் கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT