மூலிகை குடிநீர் வழங்கிய மாணவிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சி.ஐ.டி பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜனவரி 1 அன்று விபத்தில் தனது தகப்பனாரை இழந்து வறுமையில் வாடிய போதும் தனது சொந்த ஊரான குந்தபுரம் கிராம மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் பொதுமக்களின் நலன் கருதி தனது 5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தை செலவு செய்து மூலிகை குடிநீரை வழங்கினார் ஆறாம் வகுப்பு மாணவி அபி. இந்த அரிய செயலை அறிந்த பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி அபியை, திருமானூர் காவல்நிலைய சி.ஐ.டி பழனிசாமி செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டிய சம்பவம் சமூக சிந்தனையுடையவர்களின் மனதைக் காயப்படுத்துவதாய் இருந்தது. இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவியைத் தொடர்புகொண்ட சிஐடி பழனிசாமி, வருத்தம் தெரிவித்தார்.