ADVERTISEMENT

காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

11:46 AM Aug 14, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசு சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் க. வெங்கடராமனுக்கும், சென்னை பெருநகர சட்டம் மற்றும் ஒழுங்கு வடக்கு காவல்துறை தலைவர் மற்றும் கூடுதல் காவல் ஆணையாளர் அஸ்ரா கர்க்குக்கும், சென்னை நுண்ணறிவு, குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை துணைத் தலைவர் சு. ராஜேந்திரனுக்கும், சென்னை பெருநகர காவல் இணையவழி குற்றப் பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையாளர் ப.ஹீ. ஷாஜிதாவுக்கும், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹா. கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகள் 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி திருப்பூர் மாநகர கொங்கு நகர் சரக காவல் உதவி ஆணையர் வே. அனில் குமார், மதுரை சரக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ. சரவணன், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ர. மாதையன், கோயம்புத்தூர் மாநகரம், பீளமேடு காவல் நிலையம், காவல் ஆய்வாளர் மா. அமுதா, தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் அனிதா, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், இரா. விஜயா, அரியலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி, திருப்பூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அ. சித்திராதேவி, சென்னை பெருநகர காவல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ந. மணிமேகலை, திருச்சி குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா ஆகிய 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என உள்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காவல் பதக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT