/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-govt-medal.jpg)
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் குடியரசு தினத்தன்று (26.01.2024) வழங்கப்படும்.
அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2023 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத்தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என பொதுத் துறையின் அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)