ADVERTISEMENT

“எங்கள் அகராதியில் அவர்கள் சமூக விரோதிகள் தான்..” - அண்ணாமலை ஆவேசம்

10:01 AM Oct 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பதிலளித்திருந்தார். இது பெரும் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியது.

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு என்ன காரணம் யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டு கால விசாரணையில் 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 17 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப் படம்

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சாதாரண மனிதர் சாலையில் போராட்டம் நடத்துகிறார். பத்திரிகை நண்பர்கள் நீங்களும் போராட்டம் நடத்துகிறீர்கள். அப்போது, ஒரு மனிதர் கையில் கல்லை எடுத்து எறிந்தால், அந்த மனிதரின் பெயர் என்னுடைய அகராதியில் சமூக விரோதி தான். ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்துவேன் என்று சென்றாலும், பொது சொத்தை சேதப்படுத்தினாலும் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான்.

நடிகர் ரஜினிகாந்த் சொல்லியிருந்த கருத்து என்ன, இது அமைதியான போராட்டம் என்றால் அது வேறு. ஆனால், இது நோக்கத்தோடு, யாரோ உள்ளே நுழைந்து குழப்பத்தை விளைவித்து பொது சொத்துக்களை சேதம் செய்திருக்கிறார்கள். அதனால், சமூக விரோதி என்று சொன்னார். இதில் எனக்கும் ஒன்றும் தவறாக தெரியவில்லை.

உங்களை போல், என்னை போல் டி.வி.யில் ஒரு விஷயத்தை பார்த்துவிட்டு அவரின் அனுபத்தில் ஒரு கருத்தை சொல்கிறார். அதனால், ராஜினிகாந்தைப் பற்றி இந்த ஆணையம் சொல்லியுள்ள கருத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆணையத்தில், பொது வெளியில் இருப்பவர்கள் பார்த்து பேச வேண்டும் என்கிறது. அப்படியென்றால், தமிழ் திரையுலகில் இருக்கும் பலர் சி.ஏ.ஏ. பற்றி கருத்து சொல்கிறார்கள். சினிமா படத்தில் பல கருத்துகளை சொல்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த கமிஷன் என்ன செய்துகொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT