ADVERTISEMENT

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரக் கொலை..! கணவன் - மனைவி கைது

12:01 PM Apr 19, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமமுக பிரமுகர் நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் - மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (45). இவர் அமமுகவில் வர்த்தக அணி பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

நெடுஞ்சாலைகளுக்குத் தார் விற்பனை செய்வது உள்ளிட்ட பிற தொழில்கள் செய்து வருவதாகவும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வருவதால், 15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க ஆலங்குடி வந்து செல்வார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (16.04.2021) நெடுங்கூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டின் கழிவறையில் நிர்வாண நிலையில் கழுத்தும், பிறப்புறுப்பும் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன. கொலையான பாண்டிசெல்வம் வீட்டின் அருகே வசிக்கும் பொன்னம்பலம் (30) லாரி டிரைவர். இவருக்கு சங்கீதா (23) என்ற மனைவி உள்ளார். தனது கணவர் லாரி ஓட்டச் செல்லும்போதெல்லாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதனை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சங்கீதா தாய் வீட்டிற்கு செல்வது குறித்து பொன்னம்பலம், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ''நீங்கள் பணிக்காக வெளியூர் செல்லும்போதெல்லாம் பாண்டிசெல்வம் என்னிடம் பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்து வருகிறார்'' என கூறி அழுதுள்ளார்.

தனது மனைவிக்கு நிகழும் பிரச்சினைக் குறித்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகன் பசுவராஜ் (30) என்பவரிடம் கூறி பொன்னம்பலம் புலம்பியுள்ளார். இதையடுத்து பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலம் உறவினர் பசுவராஜ் ஆகியோர் மூவரும் சேர்ந்து, கடந்த 14ஆம் தேதி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியனை கத்தியால் கழுத்தை அறுத்தும், ஆணுறுப்பை அறுத்தும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தனர்.

கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் போலீசாருக்கே இந்த விஷயம் தெரியவந்தது. பின்னர் கொலை குறித்து வழக்குப் பதிவுசெய்த சிறுகனூர் போலீசார், பொன்னம்பலம், அவரது மனைவி சங்கீதா, பொன்னம்பலத்தின் உறவினர் பசுவராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னம்பலம் மற்றும் பசுவராஜ் ஆகியோரை துறையூர் கிளைச் சிறையிலும், சங்கீதாவை திருச்சி பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT