நடிகர் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (05/02/2020) காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடுகளிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாள் நடைபெற்ற சோதனையில் ஏ.ஜி.எஸ் குழுமம், அன்புச்செழியன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத சுமார் 25 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Show comments