தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மேக்கிழார்பட்டியில் , அதிமுக அரசின் சார்பாக 15/04/2002 அன்று ஆண்டிபட்டி -சேடபட்டி கூட்டுக்குடிநீர்த்திட்டத் துவக்க விழா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கைகளினால் வழங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் இன்றும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இத்திட்டத்தை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் மனவருத்தத்துடன் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
அப்போதைய அதிமுக அரசு ஆதிதிராவிடர்களுக்காக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதன் மூலம் ஒரு பெரிய விளம்பரத்தை மட்டுமே நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பட்டா என்ற பெயரில் முதலமைச்சரின் புகைப்படம் கொண்ட கவர் ஒன்றை மட்டுமே வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 220 க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.இவர்களுக்கு இது வரையிலும் முறைப்படி இத்திட்டம் சென்றடையவில்லை. 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு பல்வேறு ஆர்பாட்டங்களை நடத்தியும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பயன் இல்லை. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் நிலத்தை அளவிட்டு தந்துள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கு சரியான பாதையும் இல்லை. நிலம் கொடுத்த அரசு பாதையில்லை என்று மக்களை பலமுறை ஏமாற்றியுள்ளது. பின்பு மீண்டும் ஆர்பாட்டங்களை நடத்தி பாதை பெறப்பட்டது.ஆனால் அந்த பாதையில் செல்ல முடியாதவாறு 5 அடி உயரத்தில் ஒரு பாறை இருந்தது. அந்த பாறையை உடைக்கவும் அதிகாரிகள் முன் வரவில்லை . அப்பாறையை மக்கள் தங்களின் சொந்த பணத்தை செலவழித்து அகற்றமுற்பட்ட பொழுது அதற்கும் அதிகாரிகள் தடைவிதித்தனர்.
பா.விக்னேஷ் பெருமாள்