ADVERTISEMENT

‘உலக அதிசயம்’லட்சியம்! நிறைவேறிய சரத்குமாரின் காமராஜர் மணிமண்டப கனவு!

04:25 PM Jul 15, 2019 | santhoshb@nakk…

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியிருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இம்மணிமண்டபத்தை, காமராஜரின் 117-வது பிறந்த தினமான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT


தலைமைச் செயலகத்தில் பேசிய ராதிகா “தன் வாழ்நாளில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கருதி, அதற்காக உழைத்து, உருவாக்கிக் காட்டியிருப்பவர் சரத்குமார். அவருடைய கனவு நனவானதை மிகுந்த மகிழ்ச்சியோடு இன்று நான் பார்க்கிறேன். சரத்குமாரின் மனைவி என்ற முறையிலும், நீண்ட நாள் நண்பர் என்ற உரிமையோடும், இந்த உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் அனைவரையும் அவர் சார்பிலும், என் சார்பிலும் அன்புடன் வரவேற்கிறேன்.” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய வரலட்சுமி “எனது தந்தை சரத்குமாருக்கும், அவருடைய அறக்கட்டளை சார்பில் எல்லாருக்கும் நன்றி கூறுகிறேன்.” என்றார்.

ADVERTISEMENT

இதே வேளையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஆகியோர் காமராஜர் மணிமண்டப விழாவை நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள், காமராஜர் விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மணிமண்டப வளாகத்தில் தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய சரத்குமார், இன்று விழா மேடையில் பேசிய “பெருந்தலைவர் சிலையையும், அணையா தீபத்தையும், நீரூற்றையும், மணிமண்டபத்தையும் முன் வந்து மகிழ்ச்சியோடு திறந்து வைத்திருக்கின்ற முதலமைச்சருக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.” என்றார்.

ராதிகா கூறியது போல், இம்மணிமண்டபத்துக்காக சரத்குமார் உழைத்ததன் பின்னணியையும், அவருடைய பங்களிப்பையும் பார்ப்போம்! 12 வருடங்களுக்கு முன், 2007 ஏப்ரல் 29- ஆம் தேதி காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய சரத்குமார் “22 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மணிமண்டபம் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பேசப்படும். வெறும் நினைவு மண்டபமாக இல்லாமல், மிகப்பெரிய நூலகம், ஆஸ்பத்திரி, தியான மண்டபம், யோகா மையம், இளைஞர்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி மையம் போன்றவை இங்கே அமைக்கப்படும்.” என்று அறிவிக்கவும் செய்தார். அடிக்கல் நாட்டு விழாவானது, நாடார் அமைப்புகள் கொண்டாடிய குடும்ப விழாவாக அப்போது அமைந்தது.

சரத்குமாரை திமுக ஓரம் கட்டியிருந்த நிலையில், அன்று கூடிய கூட்டம் அவருக்குத் தெம்பளித்தது. அடுத்த நான்கு மாதங்களில், 2007, ஆகஸ்ட் 31- ஆம் தேதி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன் போன்ற நாடார் பேரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ச.ம.க.வுக்குள் ஐக்கியமானார்கள். பின்னாளில் விலகியும் சென்றனர். எர்ணாவூர் நாராயணனோ, ச.ம.க.வை உடைத்து சமத்துவ மக்கள் கழகம் என்ற புதுக்கட்சியை 2016-ல் தொடங்கினார். தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளும், சரத்குமாரை ’ரசிக்காத’ நிலையில், காமராஜர் மணிமண்டப சிந்தனை மீண்டும் உயிர்பெற்றது. “ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். மணிமண்டப பணிக்கு 1 ரூபாய் நன்கொடை அளித்தாலும் பெற்றுக்கொள்வோம்.” என்றெல்லாம் கூறி, வெகு பிரயத்தனப்பட்டிருக்கிறார். மணிமண்டப பரப்பளவு சுருங்கிவிட்ட போதிலும், பிற்காலத்திலாவது உலக அதிசயங்களில் ஒன்றாக காமராஜர் மணிமண்டபத்தை அமைத்தே ஆகவேண்டும் என்ற தனது லட்சியத்தில் உள்ளுக்குள் இன்னும் உறுதியாகவே இருக்கிறார் சரத்குமார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT