ADVERTISEMENT

பாலித்தீன் கவரால் இறுக்கி 7 வயது மகன் கொலை; தங்கள் உயிரையும் மாய்த்துக்கொண்ட பெற்றோர்; கைப்பற்றிய கடிதத்தில் உருக்கம்

06:07 PM Jul 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை வடவள்ளி அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமரி தக்கலை அருகே 7 வயது மகனைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி முகிலன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்ஜினியரான முரளிதரன். இவர் தக்கலை அருகே உள்ள சரல்விளை சக்தி நகரில் மனைவி சைலஜா மற்றும் ஏழு வயது மகன் ஜீவா ஆகியோருடன் வசித்து வந்தார். மனவளர்ச்சி குன்றி காணப்பட்ட மகன் ஜீவாவை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக இந்தத் தம்பதி அனுமதித்து வந்தனர். அண்மையில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சிறுவனின் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மகன் ஜீவாவின் முகத்தை பாலித்தீன் பையால் மூடிக் கொன்றுவிட்டு தம்பதி இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார், மூன்று பேர் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிதரன் இறப்பதற்கு முன்பு எழுதிய 3 பக்கக் கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்தக் கடிதத்தில், ‘மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சிகிச்சைக்காகச் சேர்ப்பதற்கு அழைத்துச் சென்ற பொழுது, மகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் மகன் அதிகநாள் உயிர் வாழப் போவதில்லை எனத் தெரிவித்தனர். இதனால் நானும் எனது மனைவியும் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளோம். நாங்கள் இறந்த பின்பு எங்களுடைய மகன் அனாதையாகி விடக்கூடாது என நினைத்து அவனையும் கொலை செய்யத் துணிகிறோம்’ என இருந்தது. இருப்பினும் போலீசார் இந்தச் சம்பவத்தில் மேலும் விசாரணையைப் பல கோணங்களில் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT