ADVERTISEMENT

சிக்கிய 212 கிலோ கஞ்சா! சிக்கப்போகும் கஞ்சா தலைவன் யார்?

12:05 PM May 13, 2019 | Anonymous (not verified)


திருச்சி மாநகரில் சமீபகாலமாக கொலைகள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரவுடிஸமும் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா போதை பொருட்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதை எல்லாம் காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் பல இடங்களில் கஞ்சா விற்பனை என்பது கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக உறையூர், தில்லைநகர், பாலக்கரை, கோட்டை, பொன்மலை, சோம்பரசம்பேட்டை, திருவரம்பூர், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், என காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவை எல்லாம் ரவுடிகளின் தலைமையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. ரவுடிகளிடம் மாமூல் வாங்கிகொண்டு கஞ்சா விற்பனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறனர். மாதத்திற்கு ஏதாவது ஒரு வழக்கு மட்டும் ஸ்டேஷனுக்கு போட்டு விட்டுகின்றனர்.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் டி.எஸ்.பி ராஜசேகர், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள், அப்படியே ரோந்து பணியிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அடுத்துள்ள பள்ளிவிடை பாலம் அருகே சென்றபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றது. வெகு நேரமாக அங்கேயே நின்று கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தெளிவில்லாமல் பதில் சொன்னதும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியது போலீசுக்கு. இதைத் தொடர்ந்து காரையும், அந்த 2 வாலிபர்களையும் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். மேலும் காரில் சோதனை செய்த போது, காரின் பின்புறம் 212 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா 2 கிலோ கஞ்சா அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதை கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள குண்டூரை சேர்ந்த கவுசிக், துர்க்காராவ் என்பதும் தெரியவந்தது. விஜயவாடா திருச்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்புவதாகவும், திருச்சியை நெருங்கும்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து கஞ்சாவை வாங்கி செல்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த வாலிபர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபோது போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக வேறு நம்பர் பிளேட்டை மாற்றி வந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து மேல் விசாரணை நடத்தினார்.

பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி திருச்சியில் உள்ள போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம், கைதான வாலிபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சமயபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.

இது சம்மந்தமாக விசாரணை அதிகாரிகளிடம் பேசும் போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும். இது போன்று தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்து திருச்சியில் உள்ள ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கஞ்சா கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் சிக்கினால்தான், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி தெரியவரும் என்றனர்.

போலீஸ் வழக்கம்போல் கஞ்சா விற்கும் ரவுடி தலைவனிடம் பேரம் பேசிட்டு வேறு யாரையும் சிக்க வைத்து தலைவனை தப்பிக்க வைக்குமா? என்பது போக போக தான் தெரியும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT