5 kg of cannabis found in running train

ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக ரயில்வே பாதுகாப்புப் படையினர், உள்ளூர் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து ரயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், திங்கள்கிழமை (ஜூன் 13), தன்பாத் & ஆலப்புழா விரைவு ரயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

முன்பதிவில்லா பெட்டிகளில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை எடுத்து சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

காவல்துறையினர் சோதனைக்கு வருவதைப் பார்த்ததும் கஞ்சா கடத்தல் கும்பல் பையைப் போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர். அதைக்கடத்தி வந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.