ADVERTISEMENT

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர்; போலீசார் அதிரடி

07:44 AM Aug 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை காரணை - புதுச்சேரி செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அதிவேகமாக வந்த காரை போலீசார் சோதனை செய்ய நிறுத்த முற்பட்டுள்ளனர். அப்போது காரில் இருந்த ரவுடிகள் 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரின் இடது கையில் அரிவாளால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டத்தில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்ற இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. சோட்ட வினோத் மீது 10 கொலை வழக்கு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காரில் வந்த இரு மற்ற இரு ரவுடிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.

அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுப்பட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேலும் காயம்பட்ட இருவரை பற்றி விசாரித்ததில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத் (வயது 35) என்றும், இவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மற்றொரு நபர் பெயர் ரமேஸ் (வயது 32)என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி. 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடிகள் இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது ரவுடிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT