ADVERTISEMENT

பொன்பரப்பி பொன்னி பாட்டிக்கு வயது 110!

06:05 PM Sep 08, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னி (வயது 110). இவர் தனது மூத்த மகன் கலியமூர்த்தியுடன் (வயது 75) வசித்து வருகிறார்.


செந்துறை ஒன்றியம் பொன்பரப்பியில் 110 வயதான பொன்னி பாட்டியின் கணவர் 27 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 75 வயதான மூத்த மகன் கலியமூர்த்தியின் அரவணைப்பில் இருந்து வருகிறார் பொன்னி பாட்டி. கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர்.

தள்ளாடி, தண்டு ஊன்றும் வயோதிக பருவத்திலும் கூர்மையான பார்வையோடு, தெளிவான பேச்சோடு தன்னால் முடிந்த வேலையைச் செய்துகொண்டு தான் பெற்ற பிள்ளைக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வருகிறார். அவரை செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மு.ஞானமூர்த்தி தனது கட்சியினருடன் நேரில் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கி, பொன்னி பாட்டி மற்றும் அவர் குடும்பத்தாருடன் கலந்துரையாடினார். இது வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.

சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த அரியலூர் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பொன்னி பாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் மூதாட்டிக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உடை ஆகியவற்றை பரமசாந்தி என்ற அமைப்பினர் உதவியுடன் வழங்கினார்.

மேலும் மூதாட்டிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாதாமாதம் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மேலும் மூதாட்டிக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதிய தொகையைக் காலதாமதமின்றி விரைவாக அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தாசில்தார் முத்துகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா மற்றும் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT