ADVERTISEMENT

பாஜக வேகத்தை தடுப்பாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.? - விருதுநகரில் மும்முனைப் போட்டி! 

03:20 PM Apr 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சீனிவாசனும், பாஜக வேட்பாளராக பாண்டுரங்கனும், அமமுக வேட்பாளராக கோகுலம் தங்கராஜுவும் களமிறங்கியிருப்பது, ‘விருதுநகரில் மும்முனைப் போட்டி’ எனப் பேச வைத்துள்ளது.


கரோனா காலக்கட்டத்தில் தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தங்கராஜுவின் இலக்கு ‘மனைவிக்கு சேர்மன் சீட்’ என்ற அளவிலேயே இருந்தது. அதுவே, நாளடைவில் எம்.எல்.ஏ. கனவாக விரிந்தது. அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில், அமமுக பக்கம் தாவியவருக்கு, உடனே சீட் தந்தனர். ‘நான் செய்த நல்லதெல்லாம் வாக்குகளாக எனக்கே திரும்பிவரும்’ என்பது தங்கராஜுவின் நம்பிக்கையாக இருக்கிறது.

திமுக தரப்பிலோ “தான் ஒரு கிறிஸ்தவ நாடார் என்பதாலும், தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் உதவிக்கரம் நீட்டியதாலும், சிறுபான்மையினர் வாக்குகளில் கணிசமானவை குக்கர் சின்னத்தில் விழும் என்று தங்கராஜ் நினைக்கிறார். ‘போட்டியிடுவது பாஜக. அதனை வீழ்த்த வேண்டுமென்றால் ஒட்டுமொத்த வாக்குகளும் திமுக வேட்பாளருக்கே போக வேண்டும். கைம்மாறு செய்வதாக குக்கருக்கு ஆதரவளிப்பது, நாட்டுக்கு நல்லதல்ல..’ என்பதில் சிறுபான்மையினர் தெளிவாக இருக்கிறார்கள். ஒருக்காலும் திமுக வாக்கு வங்கிக்கு, அமமுக வேட்பாளரால் சேதம் இருக்காது” என்கிறார்கள்.

இளைஞரான பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், தேர்தல் களத்துக்குப் புதியவர். ரூ. 4 கோடி வரை செலவழிப்பேன் என்று சொல்லித்தான் சீட் வாங்கினார் என தாமரை தரப்பில் சொல்கின்றனர். திமுக வேட்பாளரைக் காட்டிலும் ஓட்டுக்கு அதிகமாக பணம் தருவார் என்பதே, இவரது பலமாகப் பார்க்கப்படுகிறது. திமுக வாக்குகளை தங்கராஜ் பிரித்தால், வெற்றி கைகூடும் என்றொரு கணக்கு பாஜகவுக்கு இருக்கிறது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் ‘ஓட்டுக்குப் பணம்’ வாக்காளர்களைச் சென்றடையும் என்பதால், ‘தாமரை மலரக்கூடும்’ என விருதுநகர் தொகுதியைப் பேச வைத்திருக்கிறது.

திராவிட கொள்கைகளில் பிடிமானம் உள்ள சுப்பையா, “விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி, ‘தமிழர்களின் அபாயம் பாஜக’ என்கிறார். விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வசிக்கும்போது, பாஜக வேட்பாளரால் எப்படி வெற்றி பெறமுடியும்? விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசுதான் என்று அவரால் தட்டிக்கழிக்க முடியாது. தனது அரசியல் அனுபவத்தால் ‘வியூகம்’ அமைத்து, தனது விசுவாசியான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனை வெற்றிபெற வைப்பதுதானே அண்ணாச்சியின் இலக்காக இருக்கமுடியும்?” என்று கேட்கிறார்.

வாக்குகளுக்காக தங்கராஜ் தரும் பணம், முழுமையாக வாக்காளர்களைச் சென்றடையாது என்பதை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் பட்ட அனுபவத்தை வைத்தே கணிக்கின்றனர். அதிமுக வாக்கு வங்கியில் மட்டுமே சேதாரம் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வீசுவதாகச் சொல்லப்படும் திமுக அலையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனும் கரையேறுவார் என்பது திமுகவினரின் நம்பிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT