"திராவிட அரசியலை நான் பின்தொடரமட்டேன். மேலும் திராவிட அரசியல் முற்றிலும் தோற்றுபோன ஒன்று. திராவிட அரசியலின் நோக்கம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் அவ்வளவுதான். எங்கள் நோக்கம் அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதே. தமிழ்நாடு பீஹாரைவிட எவ்வளவோ உயர்ந்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், நான் வளர்ந்த நாடுகளான சிங்கபூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட விரும்புகிறேன். இருபத்தியைந்து வருடத்திற்குமுன் ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது அவர்கள், படிப்பு, வேலை வாய்ப்பு, மருத்துவம், சினிமா என்று அனைத்திற்கும் இங்கு வந்தார்கள். ஆனால், இன்று நாம் ஹைதராபாத் செல்கிறோம். இதில் நமது வளர்ச்சி எங்கு இருக்கிறது.
எம்ஜிஆர் நிறைய ஊழல்வாதிகளை உருவாக்கினார் என்று ஏன் சொன்னேன் என்றால், 1969-ல் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார் அபோதுதான் நிறைய ஊழல்கள் நடைபெற ஆரம்பிக்கிறது. அவர்கள்தான் அறிவியல் ரீதியான ஊழல் என்பதை அறிமுகம் செய்கிறார்கள். அதற்காக பஞ்சாப்பின் தலைமை நீதிபதி சர்க்காரியா தலைமையில் சர்க்காரியா கமிஷன் அமைத்து அதனை ஆராய்வதற்கு குழு அமைத்தார்கள். அவரும் எவ்வளவோ ஆராய்ந்தார். அவருக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், இறுதிவரை அவரால் ஊழல் எங்கு நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் எம்ஜிஆர் ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று திமுகவில் இருந்து வெளியேறி புதிதாக, நல்ல நோக்கத்துடன் கட்சியை அமைத்து பதிமூன்று வருடங்கள் ஆட்சி நடத்தினார். அதன் பிறகு அவரின் கட்சியில் இருந்துவந்த ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமகளால் ஆயிரக்கணக்கான ஊழல்வாதிகள் உருவெடுத்துவிட்டார்கள். இதானால் எம்ஜிஆர்-ன் நோக்கம் சிதைந்து, இலட்ச கணக்கான ஊழல்வாதிகளை அவர் உருவாக்கி சென்றியிருக்கிறார் என்று சொன்னேன்” என்று பதில் அளித்தார்.