ADVERTISEMENT

“பாதிக்கப்பட்ட கட்சி பாஜக; இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை” - வானதி சீனிவாசன்

12:10 PM Oct 28, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம்.

கோவை மாநகருக்கு வந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், பா.ஜ.க. மீதும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதும் பல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கோவை பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர் பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்குப் பறந்து வந்திருக்கிறார்.

தீபாவளிக்கு முந்தைய தினம் அதிகாலை, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்துச் சிதறியதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் இதனை 'சிலிண்டர் வெடிப்பு' எனக் கூறி மறைக்கப் பார்த்தார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகே உண்மை வெளிவந்தது.

2019 ஈஸ்டர் நாளில், இலங்கையில் கிறிஸ்தவ சர்ச்சில் குண்டு வைக்கப்பட்டது போல தீபாவளி நாளில் கோவையைத் தகர்க்கச் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்தது. ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடி பொருட்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உண்மையை வெளிப்படுத்திய பிறகே காவல் துறையும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. 'கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. பா.ஜ.க. தான் அரசியல் செய்து வருகிறது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது என்றால் 3,000 போலீசார் ஏன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்? 3,000 காவல் துறையினரைக் குவிக்க வேண்டிய அளவுக்கு 40 சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்க வேண்டிய அளவுக்கு மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால் தான் அக்டோபர் 31-ம் தேதி திங்கள் கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம் அமைச்சரின் மிரட்டலுக்கெல்லாம் பாஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கோவையில் ஏன் கார் வெடித்து சிதறியது? அதில் உயிரிழந்தவரின் வீட்டில் எதற்காக 75 கிலோ வெடிபொருட்களை வைத்திருந்தார்கள்? இதுபோன்ற நிலை ஏன் தமிழகத்தில் ஏற்பட்டது? இதனை எப்படி தடுப்பது? என்பது பற்றியெல்லாம் அமைச்சர் சிந்திக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க. முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறதே என்று கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க.தான். இதுவரை 200 நிர்வாகிகளை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன.

1998-ல் பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான திரு. எல்.கே. அத்வானிஜி அவர்களை கொல்வதற்காகத்தான் கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் இருந்தது. இப்போதும் தி.மு.க. ஆட்சியில் தான் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT