அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி அறிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (18-03-24) கையெழுத்தாகி ஒப்பந்தமானது. அதன்படி, மதிமுகவுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிட்டது.
இந்த நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இது குறித்து, வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். மதிமுகவுக்கு தேர்தல் சின்னம் இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், பட்டியலில் இருக்கக்கூடிய 3 சின்னத்தை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை. மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம்.” என்று கூறினார்,