தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ ஆவது உறுதியானது.
இந்நிலையில், வேட்பு மனு ஏற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான்தான். மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை ஏற்க மறுத்தவன் நான் என்று கூறினார். என் குடும்பத்தில் இருந்து யாரும், பதவிகளுக்கு வர மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால்தான், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டேன். என்னுடைய தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம் தான். வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. 26 ஆண்டுகளாக கட்சியில், எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை. பதவி பெற்றவர்கள்தான் மதிமுகாவை விட்டு சென்றார்கள், லட்சியத்திற்காக யாரும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை என்று கூறினார். மேலும் வைகோவின் மனுவிற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேட்சைகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.