திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நேற்று (26ம் தேதி) நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிரான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியது முக்கியத்துவம் பெற்றது.
மாநாடு ஏற்பாடுகள்
இந்த மாநாட்டிற்காக சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவில் 1000 அடி நீளம் - 500 அடி அகலத்தில் திடல் அமைக்கப்பட்டது. மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் பழைய நாடாளுமன்ற வடிவிலும், பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிடத்தின் வடிவிலும் அமைக்கப்பட்டது. நுழைவுப் பகுதியில் மாபெரும் புத்தக வடிவில் இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் முழுவுருவச் சிலையும் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை மற்றும் புத்தகத்தினை விசிக தொண்டர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் விழா மேடை புதிய நாடாளுமன்றக் கட்டட வடிவில் 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டது. மேடையின் இரு பக்கத்திலும் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு, தலைவர்கள் பேச வரும் முன்பு அவர்கள் பேச்சுகள் அந்த பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி, சின்னங்கள் வண்ணமயமாக ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சி நிரல்
இந்த மாநாட்டில் பாடகர் அறிவு குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டுத் திடலின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில் இசை நிகழ்ச்சி நடந்தது. இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடந்தன.
உறுப்பினர் சேர்க்கை இணைய தளம்
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணைய தளத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தேக இணையதளம் வெளியிடப்பட்டது. இதனை தொல். திருமாவளவனுடன் இணைந்து விசிக தேர்தல் ஆலோசகரும் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவருமான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார். மேலும் விசிக இணைய வழியில் ஆதவ் அர்ஜுனா, முதல் உறுப்பினராக தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.